Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தாம்பரம் அருகே தொலைக்காட்சி பெட்டி விழுந்து சிறுவன் பலி

தாம்பரம் அருகே தொலைக்காட்சி பெட்டி விழுந்து சிறுவன் பலி

By: Nagaraj Mon, 17 Aug 2020 8:51:48 PM

தாம்பரம் அருகே தொலைக்காட்சி பெட்டி விழுந்து சிறுவன் பலி

தொலைக்காட்சி பெட்டி விழுந்து சிறுவன் பலி... சென்னை தாம்பரம் அருகே பாதுகாப்பற்ற முறையில் கடப்பா கல் மீது வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சி பெட்டி தலையில் விழுந்து பலத்த காயமடைந்து 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரத்தை அடுத்துள்ள சேலையூர் அகரம்தென் அன்னை சத்யா நகரில் வசிப்பவர் பாலாஜி. இவர் வீட்டில் சிறிய கடப்பா கல்லுக்கு கட்டைகளை வைத்து முட்டுக் கொடுத்து உரிய பாதுகாப்பு இன்றி அதன் மீது தொலைக்காட்சி பெட்டியை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் அந்த டிவி மீது செல்போனை வைத்து பாலாஜி சார்ஜ் ஏற்றுவது வழக்கம் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பாலாஜி வீட்டில் நேற்று இரவு 7 மணியளவில் தூங்கி கொண்டிருக்க, அவரது மனைவி வெளியே நின்று கொண்டிருந்துள்ளார்.

tv set,boy killed,interrogation,chromeplate ,தொலைக்காட்சி பெட்டி, சிறுவன் பலி, விசாரணை, குரோம்பேட்டை

அப்போது, பாலாஜியின் செல்போன் எண்ணுக்கு அழைப்பு வந்ததை கேட்ட அவரது மகனான 3 வயது சிறுவன் கவியரசு ஓடி வந்து அதை எடுத்துள்ளான். அப்போது உரிய பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்த கடப்பா கல் சரிந்து தொலைக்காட்சி பெட்டி சிறுவன் கவியரசு மீது விழுந்துள்ளது.

இதில் சிறுவனின் தலையில் பலத்த காயம் அடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வந்த பெற்றோர், அவனுடைய தலையில் துணியை வைத்து கட்டி ரத்தத்தை நிறுத்த முயற்சித்துள்ளனர். ஆனால் ரத்தம் நிற்காமல் கொட்டியதால் சிறுவன் கவியரசு மயக்கமடைந்தான். இதையடுத்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிறுவனை பெற்றோர் கொண்டு சென்றபோது, அங்கிருந்த மருத்துவர்கள் உடலை பரிசோதித்து அவன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்த தகவலின்பேரில் குரோம்பேட்டை போலீசார், இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தொலைக்காட்சி பெட்டி போன்றவற்றை வீட்டில் உரிய பாதுகாப்புடன் வைத்திருப்பது இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Tags :
|