வரும் 1ம் தேதி முதல் நீதிமன்றத்தில் காணொலி வாயிலாக வழக்குகள் விசாரணை
By: Nagaraj Sat, 30 May 2020 8:03:43 PM
வரும் ஜூன் 1-ம் தேதி முதல் நீதிமன்றத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலமாக வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கால் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுப்பு அளிக்கப்பட்டது. ஆனால் 3ம் கட்ட ஊரடங்கில் இருந்து ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு 50% பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் முதல் நீதிபதிகள் தங்கள் இல்லத்தில் இருந்தே வழக்குகளை விசாரித்து வருகின்றனர்.
உரிய பாதுகாப்புடன் நேரடியாக வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என பார் கவுன்சில் மற்றும் வழக்கறிஞர் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன. இதன் அடிப்படையில் வரும் 1-ம் தேதி முதல் நீதிமன்றத்தில் இருந்தே வீடியோ கான்பரன்சிங் முறையில் வழக்கு விசாரணை நடைபெறும்.
எனவே, நீதிபதிகள் லேப்டாப் உள்ளிட்ட உபகரணங்களை நீதிமன்றத்திற்கு எடுத்துவர வேண்டும் என்று தலைமை பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் 33 அமர்வுகள் வீடியோ கான்பரன்சிங் மூலமாக வழக்குகளை விசாரிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.