கவச உடைகள் உற்பத்திக்கான விதிமுறையை மத்திய அரசு தளர்த்தியது
By: Karunakaran Thu, 25 June 2020 5:30:51 PM
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாலும், கொரோனா பரிசோதனை அதிகரிப்பாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் ஆகியோர் கொரோனா நோயாளிகளுக்கு முன்வரிசையில் நின்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்காக பி.பி.இ. என்று அழைக்கப்படுகிற கவச உடைகள், கருவிகள் அணிந்து கொள்ளப்படுகிறது. தற்போது இவற்றின் உற்பத்திக்கான விதிமுறையை தளர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தரமான கவச உடைகளையும், கருவிகளையும் வினியோகிக்க வசதியாக மத்திய அரசு இந்த தளர்வை ஏற்படுத்தியுள்ளது.
வடிகட்டியுடன் கூடிய அரை முக கவசங்கள், அறுவைசிகிச்சை முக கவசங்கள், கண் பாதுகாப்பு கருவிகள் ஆகியவற்றுக்கான உற்பத்தி விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அமைப்பான இந்திய தர நிர்ணய பணியகம் கூறுயுள்ளது. முன்பு இவற்றை உற்பத்தி செய்வதற்கு உள்சோதனை வசதிகள் உள்ளவர்களுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்பட்டது. தற்போது இது தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பி.பி.இ. உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்பு மாதிரிகளை இந்திய தர நிர்ணய பணியகம் உரிமம் பெற்ற ஆய்வுக்கூடங்களில் அல்லது அந்த அமைப்பினால் பட்டியலிடப்பட்ட தனியார் அல்லது அரசு ஆய்வுக்கூடங்களில் சோதனை செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.