மத்திய அரசு, யார் மீதும் பாரபட்சம் காட்டாமல் செயல்பட்டு வருகிறது - பிரதமர் மோடி
By: Karunakaran Wed, 23 Dec 2020 08:51:41 AM
உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடிகாணொலி காட்சி மூலம் பங்கேற்று பேசியபோது, சமுதாயத்தில் வேறுபாடுகள் இருப்பது இயல்புதான். ஆனால், பொருளாதார மேம்பாடு, கல்வி, வாழ்க்கை தரம், தேசியம் போன்ற பொதுவான தேசிய இலக்குகளை அடைய அரசியல் வேறுபாடுகளையும், கருத்தியல் வேறுபாடுகளையும் ஒதுக்க வேண்டும். இதில் வேறுபாடு காட்டக்கூடாது என்று கூறினார்.
மேலும் அவர், வளர்ச்சியை அரசியல் கண்ணாடி வழியாக பார்க்கக்கூடாது. அரசியல் காத்திருக்கலாம், சமுதாயம் காத்திருக்கலாம். ஆனால், நாட்டின் வளர்ச்சி காத்திருக்கக்கூடாது. கருத்து வேறுபாடுகள் அடிப்படையில், நாம் நேரத்தை வீணடிக்கக்கூடாது. புதிய இந்தியாவை கட்டி எழுப்ப பொது தளத்தில் முன்னேறிச் செல்ல வேண்டும். அதற்கு ‘தற்சார்பு இந்தியாவை’ இலக்காக கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இந்த பல்கலைக்கழக வளாகத்தில், ‘ஒரே இந்தியா, மாபெரும் இந்தியா’ என்ற உணர்வு வலுப்பெற நாம் பாடுபட வேண்டும். இங்கு படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு நம் நாட்டின் சிறப்புகளை தெரிவிக்க வேண்டும். நாடு முன்னேறிச் செல்லும்போது, மதத்தின் காரணமாக யாரும் பின்தங்கி விடக்கூடாது என பிரதமர் மோடி நிகழ்ச்சியில் கூறினார்.
மேலும் அவர், மத்திய அரசு, யார் மீதும் பாரபட்சம் காட்டாமல் செயல்பட்டு வருகிறது. பன்முகத்தன்மைதான் நாட்டின் பலம். இதை மறக்கவோ, பலவீனமாகவோ அனுமதிக்கக்கூடாது என மோடி கூறினார்.