இலங்கை தூதரை அழைத்து மத்திய அரசு கண்டிக்க வேண்டும்
By: Nagaraj Mon, 27 Feb 2023 7:04:46 PM
சென்னை: தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இதுகுறித்து, இந்தியாவுக்கான இலங்கை தூதரை அழைத்து மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கோடியக்கரை அருகே தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-வங்கக் கடலில் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். மீன் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்தனர். இது கண்டிக்கத்தக்கது.
கடந்த 24ம் தேதி வங்கக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தரங்கம்பாடி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். அதனால் ஏற்பட்ட பயமும் பதட்டமும் குறையும் முன்பே அடுத்த தாக்குதல் நடந்தது. 11 பேர் காயமடைந்தனர்.
தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட இரண்டு சம்பவங்களும் இந்திய கடல் எல்லைக்குள் நடந்தவை. எல்லை தாண்டினாலும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்த இலங்கை கடற்படைக்கு அதிகாரம் இல்லை. இப்படிப்பட்ட சூழலில் இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதை இந்தியா வேடிக்கை பார்க்கக் கூடாது.
தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இதுகுறித்து, இந்தியாவுக்கான இலங்கை தூதரை அழைத்து மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என்று கூறினார்.