மணிப்பூர் விவசாயிகளுக்கு ரூ.38.06 கோடி இழப்பீட்டை மத்திய அரசு வழங்கவுள்ளது
By: vaithegi Tue, 03 Oct 2023 10:22:36 AM
புதுடெல்லி: கடந்த மே 3-ம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி, குக்கி இனத்தைச் சேர்ந்த மக்களிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இந்த வன்முறைகளால் இதுவரை 180 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்த கலவரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.இதையடுத்து இதுகுறித்து மத்திய அரசுக்கு, மணிப்பூர் விவசாயத்துறை ஆணையர் ஆர்.கே.தினேஷ் திட்டம் ஒன்றை அனுப்பியிருந்தார். எனவே இதற்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து மணிப்பூர் விவசாயிகளுக்கு ரூ.38.06 கோடி இழப்பீட்டை மத்திய அரசு வழங்கவுள்ளது. இதுகுறித்து விவசாயத்துறை ஆணையர் ஆர்.கே. தினேஷ் கூறியதாவது:
கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுள்ளது. இதற்காக ரூ.38.06 கோடியை மத்திய அரசு விரைவில் வழங்கும். நவம்பர் மாதத்துக்குள் இத்தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
கலவர சம்பவங்களால் சுமார் 5,127 ஹெக்டேர் நிலங்களில் விவசாயிகள் உழவுப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் போய்விட்டது. இதைத் தொடர்ந்து அவர்களுக்கு இழப்பீட்டை வழங்கும் கோரிக்கையை மணிப்பூர் அரசு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது என அவர் கூறினார்.