மத்திய அரசின் இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைகிறது
By: vaithegi Fri, 26 Aug 2022 12:22:54 PM
இந்தியா: இந்தியாவில் கடந்த 3 வருடங்களாக பரவி கொரோனா தொற்று கட்டுக்குள் வந்த நிலையில் தற்போது அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் செயல்பட தொடங்கி உள்ளன. இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு தமிழக அரசு பல நல உதவித் திட்டங்களை செயல்படுத்தி கொண்டு வருகிறது.
அதன் படி தமிழகத்தில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், இந்தியாவில் கொரோனா பரவல் முழுவதும் இன்னும் கட்டுக்குள் வரவில்லை என தெரிவித்தார்.
இந்தியாவில் டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் தினமும் ஆயிரத்துக்கும் மேல் கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்படுகிறது. இதில் தமிழகத்திற்கு பொறுத்தவரை ஒரு நாளில் 500 பேர் என்ற அளவில் கொரோனா உறுதி செய்யப்படுகிறது. எனினும் முதல்வரின் அறிவுறுத்தலின் படி ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
மேலும் இந்தியாவில் மத்திய அரசின் இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன் பிறகு தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே இதன் காரணமாக செப்டம்பர் மாதம் முழுவதும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.