ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் இன்று மாலை சந்திப்பு
By: Monisha Tue, 08 Sept 2020 2:58:54 PM
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை நேரில் சந்தித்து பேசுகிறார்.
தமிழக சட்டசபை கடந்த மார்ச் மாதத்துக்கு பிறகு இம்மாதம் 14-ந் தேதி மீண்டும் கூடுகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கோட்டையில் உள்ள மைய மண்டபத்தில் சட்டசபையை கூட்டாமல் கலைவாணர் அரங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டசபையை எத்தனை நாட்களுக்கு நடத்த வேண்டும்? என்னென்ன அலுவல்களை மேற்கொள்ள வேண்டும்? என்பது பற்றி முடிவு செய்வதற்காக சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், சட்டசபை கூட்டத்தொடரை 3 நாட்களுக்கு நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 5 மணி அளவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து பேசுகிறார்.
சட்டப்பேரவை வரும் 14ம் தேதி கூட உள்ள நிலையில் ஆளுநருடனான சந்திப்பால் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.