ஊழலை அழிப்பதே தலையாய பொறுப்பு; ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதி
By: Nagaraj Wed, 09 Dec 2020 3:25:11 PM
தலையாய பொறுப்பு... வீண் விரயம் மற்றும் ஊழலை அழிப்பதே தமது அரசாங்கத்தின் தலையாய பொறுப்பாக கருதுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊழல் ஒழிப்புத் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வெறுக்கத்தக்க செயற்பாடுகளை எதிர்த்து போராடுவதே ஊழலை தோற்கடிப்பதற்கான சிறந்த ஆயுதமாகும். வீண் விரயம் மற்றும் ஊழலை அழிப்பதே எமது அரசாங்கத்தின் தலையாய பொறுப்பாக அமைந்திருக்கிறது. இந்நிலையில், ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டு மக்களை வலுவூட்ட சுபீட்சத்தின் நோக்கு கொள்கையில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பெரும்பான்மை பலத்துடன் எனது வெற்றியை ஆதரித்தபோது ஊழல் இல்லாத வினைத்திறனான நாட்டிற்காக தங்களின் விருப்பத்தினையும் வலுவான ஆதரவினையும் நாட்டு மக்கள் வழங்கியுள்ளனர். இலஞ்ச ஊழல் பற்றிய சம்பவங்களை விசாரணை செய்யும் அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவிப்பதன் ஊடாக குடிமக்களுக்கான கடமையை உரிய வகையில் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ஊழல் கலாசாரத்தில் இருந்து நாட்டை விடுவித்து ஒரு சிறந்த தேசத்தை அடுத்த தலைமுறையினரிடம் கையளிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.