தாய் இறந்தது தெரியாமல் அவருடன் விளையாடும் குழந்தை; முசாபர்பூரில் வேதனை
By: Nagaraj Thu, 28 May 2020 11:48:12 AM
தாய் இறந்தது தெரியாமல் அவர் மீது போர்த்தப்பட்டிருந்த போர்வையை இழுத்து விளையாடும் குழந்தையின் வீடியோ சமூக இணையதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கி வருகிறது.
புலம் பெயர் தொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களைத் தாண்டி, ஒவ்வொரு இடத்தையும் கடந்து செல்கின்றனர். அவர்கள் எதிர்கொள்ளும் துயரங்களை வெளிக்காட்டும் விதமாய் அமைந்திருப்பதாகக் கூறி, இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இறந்த தாயின் மேல் கிடக்கும் போர்வைக்குள் புகுவதும் பிறகு வெளியே வருவதுமாக அந்தக் குழந்தையின் செயல் பலரையும் வேதனைப்படுத்தியுள்ளது.
23 வயதான அந்தப் பெண் புலம்பெயர்ந்தோர் சிறப்பு ரயிலில் திங்களன்று பீகார் முசாபர்பூர் வந்தார். இந்தப் பெண்ணின் குடும்பத்தினர், உணவும், குடிநீரும் இன்றி உடல் நலம் சரியில்லாமல் இருந்துள்ளனர்.
இந்தப் பெண் குஜராத்தில் ரயிலில் ஏறியுள்ளார். திங்களன்று முசாபர்பூர் வந்தவுடன் மயங்கி விழுந்து இறந்துள்ளார். இவரது உடல் நடைமேடையில் கிடக்க அந்தக் குழந்தை தாய் இறந்தது தெரியாமல் அவரை எழுப்ப முயன்றதோடு, போர்வைக்குள் புகுந்தும், இழுத்தும் விளையாடியும் உள்ளது. பிறகு பெரிய பையன் வந்து அந்தக் குழந்தையை அழைத்துச் சென்றுள்ளான்.
ரயில்வே அமைச்சகம் இது குறித்துக் குறிப்பிடுகையில், இவர் ரயிலிலேயே இறந்துள்ளதாகவும், இவர் தன் சகோதரி, சகோதரியின் கணவன், 2 குழந்தைகளுடன் சென்றதாகவும் தெரிவித்துள்ளது.