சீன அதிபர் அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த பேராசிரியர் பணியில் இருந்து நீக்கம்
By: Karunakaran Mon, 20 July 2020 11:06:13 AM
சீனாவின் சிங்குவா பல்கலைக்கழகம் மிகப்பெரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு ஜூ சாங்ருன் சட்ட பேராசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஜூ சாங்ருன், அதிபர் ஜின்பிங் தலைமையிலான சீன அரசை வெளிப்படையாக விமர்சனம் செய்து வந்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா பரவிய காலத்தில் அதிபர் ஜின்பிங் மேற்கொண்ட மோசடிகள் மற்றும் தணிக்கை விவரங்கள் குறித்து ஜூ சாங்ருன் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். மேலும் அதிபர் பதவியை ஜின்பிங் நீட்டித்ததுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வந்தார். இந்த கட்டுரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஜூ சாங்ருன் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியபோதும், அது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. தற்போது, அதிபர் மற்றும் அவரது அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்ததற்காக பேராசிரியர் ஜூ சாங்ருனை சிங்குவா பல்கலைக்கழகம் பணியில் இருந்து நீக்கியுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களை மீறி அரசுக்கு எதிராக கட்டுரைகளை எழுதி வந்ததால் பேராசிரியர் ஜூ சாங்ருன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 57 வயதான ஜூ சாங்ருன் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிங்குவா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.