மெக்சிகோவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 45 ஆயிரத்தைத் தாண்டியது
By: Karunakaran Fri, 31 July 2020 11:13:13 AM
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.70 கோடியைக் கடந்துள்ளது.
மேலும் கொரோனா காரணமாக உலகம் முழுவதும் இதுவரை 6.70 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் கொரோனா பாதிப்பில் இருந்து 1.08 கோடிக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர். உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் மெக்சிகோ தற்போது 6-வது இடத்தில் உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக தற்போது மெக்சிகோவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
மெக்சிகோவில் ஒரே நாளில் 5,752 பேர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டனர். இதனால் அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் 4 லட்சத்து 8 ஆயிரத்து 449 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு கொரோனா காரணமாக ஒரே நாளில் 485 பேர் பலியாகினர். இதனால் அங்கு கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆயிரத்து 361 ஆக அதிகரித்துள்ளது.
மெக்சிகோவில் இதுவரை 2.67 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். மேலும் அங்கு கொரோனா பாதிப்புடைய 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.