கொரோனா நோயாளி கவச உடையுடன் வந்து தாய்க்கு இறுதி அஞ்சலி
By: Nagaraj Sun, 13 Sept 2020 5:12:58 PM
தாயின் உடலுக்கு கவச உடையுடன் அஞ்சலி... திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உயிரிழந்த தனது தாயின் உடலுக்கு கொரோனா நோயாளி ஒருவர் கவச உடையுடன் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்திய காட்சி சோகத்தை ஏற்படுத்தியது.
பாப்பானேரியைச் சேர்ந்த முருகேசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவரது தாய் உடல் நலிவுற்று உயிரிழந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
கொரோனா பாதித்தவர் என்பதால் வெளியே செல்ல அனுமதி இல்லாத நிலையில், தாயின்
முகத்தை கடைசியாக ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என மருத்துவர்களிடம்
முருகேசன் மன்றாடி இருக்கிறார்.
இதனையடுத்து வருவாய்த்துறையினர்
அனுமதியுடன் 108 ஆம்புலன்ஸில் அழைத்து வரப்பட்ட முருகேசன், சுமார் 10
நிமிடங்கள் மட்டும் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டார். பெற்ற தாய்க்கு
உடனிருந்து இறுதி காரியங்களை செய்ய முடியாத துக்கத்தை உள்ளுக்குள் அடக்கிக்
கொண்டு அவர் அஞ்சலி செலுத்தியது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.