டிசம்பர் மாதமே இத்தாலியில் கொரோனா வைரஸ் இருந்ததாக ஆய்வில் தகவல்
By: Monisha Sat, 20 June 2020 10:31:04 AM
சீனாவின் உகான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகளின் இயல்பு வாழ்கை முற்றிலும் முடங்கியுள்ளது. தற்போது அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் கொரோனா பாதிப்பு மையம் கொண்டுள்ளது.
மார்ச் மாதத்தில் அதிக பாதிப்பைச் சந்தித்த இத்தாலியில் கொரோனா தாக்கம் தற்போது படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது. இத்தாலியில் முதல் முதலாக பிப்ரவரி மாதத்தின் இடைப்பகுதியில்தான் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில், அந்நாட்டின் தேசிய சுகாதார அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வில் டிசம்பர் மாதமே இத்தாலியில் கொரோனா வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த ஆய்வில் வெளியான தகவல் வருமாறு:- "இத்தாலியின் மிலன் மற்றும் துரின் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸின் மரபணுக்கள் இருந்ததற்கான தடயங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கடந்த அக்டோபர் 2019 - நவம்பர் 2019 இடைப்பட்ட நாட்களில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் கொரோனா மரபணு மாதிரிகள் உறுதி செய்யப்படவில்லை. ஆனால், டிசம்பர் 2019 முதல் ஜனவரி 2020 இடைப்பட்ட நாட்களில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் கொரோனா மரபணு மாதிரிகள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இத்தாலியில் கொரோனா பரவல் எவ்வாறு ஏற்பட்டது என்பதை அறிந்துகொள்ள முடியும்" இவ்வாறு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தாலியில் 2,38,159 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதில் 1,80,544 பேர் குணமடைந்த நிலையில், 34,514 பேர் உயிரிழந்துள்ளனர்.