இலங்கை பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கின
By: Nagaraj Thu, 06 Aug 2020 08:45:18 AM
காலை 7 மணிக்கு தொடங்கியது... பொதுத் தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
9ஆவது நாடாளுமன்றுக்கான பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் இடம்பெற்றிருந்தன. 5 மணியளவில் வாக்குப்பதிவுகள் இடம்பெற்ற பின்னர் சுமார் 8 மணியளவில் வாக்குப் பெட்டிகள் யாவும் பலத்த பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தன.
இம்முறை தேர்தலில் 70வீத வாக்குப்பதிவுகள் இடம்பெற்றதாக தேசிய தேர்தல்கள்
ஆணைக்குழு அறிவித்துள்ளது. அத்துடன் இன்று பிற்பகலுக்கு முன்னர் முதலாவது
தேர்தல் முடிவை வெளியிடக் கூடியதாக இருக்கும் என்றும் இறுதி தேர்தல்
முடிவுகளை இன்று நள்ளிரவு அளவில் வழங்கக் கூடியதாக இருக்கும்
தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேநேரம், இம்முறை தேர்தலில் நாடு
முழுவதிலும் அமைக்கப்பட்டு இருந்த 12,885 மத்திய நிலையங்களில் பதிவு
செய்யப்பட்ட ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 வாக்காளர்கள்
வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.