- வீடு›
- செய்திகள்›
- நாடு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தனது கூட்டு திறனை நிரூபித்துள்ளது - பிரதமர் மோடி
நாடு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தனது கூட்டு திறனை நிரூபித்துள்ளது - பிரதமர் மோடி
By: Karunakaran Sat, 31 Oct 2020 11:37:26 AM
இந்தியாவின் இரும்பு மனிதரும், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியுமான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினம் இன்று தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். குஜராத் மாநிலம் சென்ற பிரதமர் மோடி, கெவாடியா கிராமத்தில் உள்ள ஒற்றுமை சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
பின்னர் அங்கு நடந்த தேசிய ஒற்றுமை தின அணிவகுப்பை பார்வையிட்டார். அதன்பின், நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், இன்று சபர்மதி ஆற்றங்கரையில் இருந்து கெவாடியா வரை ஒரு கடல் விமான சேவை இன்று தொடங்க உள்ளது. இது இந்த பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்த உதவும் என்று கூறினார்.
மேலும் அவர், இன்று காஷ்மீர் ஒரு புதிய வளர்ச்சிப் பாதையில் நகர்ந்துள்ளது எனவும், வடகிழக்கில் அமைதியை மீட்டெடுப்பதாக இருக்கட்டும் அல்லது அங்கு வளர்ச்சிக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளாக இருக்கட்டும் எதுவாக இருந்தாலும், இன்று நாடு ஒற்றுமையின் புதிய பரிமாணங்களை எட்டுகிறது எனவும் பிரதமர் மோடி நிகழ்ச்சியில் கூறினார்.
கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் 130 கோடி இந்தியர்கள் இணைந்து களப்பணியாளர்களை கவுரவித்தனர். இந்த நேரத்தில் நாடு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தனது கூட்டு திறனை நிரூபித்துள்ளது என பிரதமர் மோடி பெருமிதம் அடைந்தார்.