- வீடு›
- செய்திகள்›
- புதுச்சேரி மாநிலத்திலும் வரும் 31-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது - முதலவர் நாராயணசாமி
புதுச்சேரி மாநிலத்திலும் வரும் 31-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது - முதலவர் நாராயணசாமி
By: Monisha Wed, 01 July 2020 12:07:44 PM
புதுச்சேரியில் தொடக்கத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 700-ஐ தாண்டியுள்ளது. இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் மத்திய அரசின் அறிவிப்பின்படி புதுவை மாநிலத்திலும் வரும் 31-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. அதன்படி பள்ளி, கல்லூரிகள், உடற்பயிற்சி கூடங்கள், கோச்சிங் சென்டர், தியேட்டர்கள், மதுபார்கள் ஆகியவை தொடர்ந்து முழுமையாக மூடப்பட்டு இருக்கும்.
நமது மாநிலத்தில் உள்ள மக்களின் பாதுகாப்பினையும், பொருளாதாரத்தையும் கருத்தில் கொண்டு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ளோம். சென்னையில் இருந்து வருபவர்களால் புதுவையில் தொற்று அதிகமாக பரவியது. கொரோனா பரவுவதை தடுக்க முக கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது அவசியமானதாகும்.
ஏற்கனவே அறிவித்தபடி அரசியல் கூட்டங்கள், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்களை தவிர்க்க வேண்டும். 5 பேருக்கு மேல் கூடுவதை தவிர்க்க வேண்டும். இந்த உத்தரவு வருகிற 31-ந்தேதி வரை அமலில் இருக்கும்.
மாநிலத்தில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். அந்த நேரத்தில் மக்கள் வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏற்கனவே உள்ள தளர்வுகள் நாளை (வியாழக்கிழமை) வரை அமலில் இருக்கும். நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 31-ந்தேதி வரை புதிய நடைமுறைகள் அமலுக்கு வருகிறது. அதன்படி காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கடைகள் செயல்படலாம். ஓட்டலுக்கும் இது பொருந்தும். விதிகளை யாராவது மீறினால் அபராதம் விதிக்கப்படும். வெளிமாநிலத்தவர் பரிசோதனைக்கு பிறகே புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.