இந்தியாவில் கொரோனா பாதித்து பலியானவர்கள் எண்ணிக்கை 2206 ஆக உயர்வு
By: Nagaraj Mon, 11 May 2020 3:26:32 PM
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், 2206 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
தற்போது கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் பரிசோதனைகளை அதிகரிக்க அதிகரிக்க, புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. உயிரிழப்பும் கணிசமாக உயர்கிறது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 67,152 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4213 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 97 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2206 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 20917 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 22171 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 832 பேர் பலியாகி உள்ளனர். குஜராத்தில் இதுவரை 8194 பேருக்கும், தமிழகத்தில் 7204 பேருக்கும், டெல்லியில் 6923 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 3614 பேருக்கும், ராஜஸ்தானில் 3814 பேருக்கும், உத்தர பிரதேசத்தில் 3467 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.