கொரோனாவுக்கு பலியானோர் விகிதம் 2.23 சதவீதமாக குறைந்தது
By: Karunakaran Thu, 30 July 2020 12:22:55 PM
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றாலும், கொரோனாவிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்வது சற்று ஆறுதலடைய செய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவில் இருந்து குணமடைந்து 35 ஆயிரத்து 286 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் தொடர்ந்து 6-வது நாளாக, நாள் ஒன்றுக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வருகின்றனர். மேலும் நாடு முழுவதும் இதுவரை கொரோனாவுக்கு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 88 ஆயிரத்து 29 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை வேகமாக 10 லட்சத்தை நெருங்கி வருகிறது. குணமடைந்தவர்கள் விகிதம் 64.51 சதவீதமாக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட 5 லட்சத்து 9 ஆயிரத்து 447 பேர் மட்டுமே மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். தற்போது கொரோனாவுக்கு பலியானோர் விகிதம், 2.23 சதவீதமாக குறைந்துள்ளது.
கடந்த ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து கொரோனாவுக்கு பலியானோர் விகிதத்தில் 2.23 சதவீதம் தான் மிகக்குறைவான அளவாகும். மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த வியூகம் தான் காரணம். இதனால் தான் தொடர்ந்து பலி விகிதம் குறைந்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.