பிரேசிலில் கொரோனா காரணமாக பலியானோர் எண்ணிக்கை 1.25 லட்சத்தைத் தாண்டியது
By: Karunakaran Sat, 05 Sept 2020 09:11:14 AM
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுக்க பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டாலும், இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போது, உலகம் முழுவதும் 2.66 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக, 8.76 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து பிரேசில் நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. தற்போது, பிரேசிலில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 1.25 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
பிரேசிலில் ஒரே நாளில் 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 40.91 லட்சத்தைக் கடந்துள்ளது. இருப்பினும் இதுவரை அங்கு கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 32.75 லட்சத்தைக் கடந்துள்ளது.
பிரேசிலுக்கு அடுத்தபடியாக கொரோனா அதிகம் பாதித்த நாடாக இந்தியா உள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாலும், கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டதாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. இருப்பினும் கொரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது.