மெக்சிகோவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 60 ஆயிரத்து 254 ஆக உயர்வு
By: Karunakaran Sun, 23 Aug 2020 5:30:39 PM
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள வுகான் நகரில் கொரோனா வைரஸ் முதன் முதலாக தோன்றியது. இந்த வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் தொடர்ந்து அமெரிக்கா முதலிடத்தில் நீடிக்கிறது. அமெரிக்காவில் 1 லட்சத்து 76 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும், பிரேசிலில் 1 லட்சத்து 14 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர். அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக கொரோனா பலி எண்ணிக்கையில் 3வது இடத்தில் மெக்சிகோ உள்ளது.
மெக்சிகோ நாட்டில் ஒரே நாளில் 6,482 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 56 ஆயிரத்து 216 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 644 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மெக்சிகோவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 60 ஆயிரத்து 254 ஆக உயர்ந்துள்ளது.
மெக்சிகோவில் கடந்த வெள்ளி கிழமை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரம் ஆகவும், உயிரிழப்பு 504 ஆகவும் இருந்தது. இருப்பினும், இதுகுறித்து அந்நாட்டு சுகாதார அமைச்சகத்தின் தொற்றுநோய் அறிவியல் துறை இயக்குனர் அனா லூசியா கூறுகையில், கடந்த வாரங்களில் பாதிப்பு எண்ணிக்கையானது குறைந்து வருகிறது. இதேபோன்று கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.