உலகம் முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 லட்சத்தை நெருங்கியது
By: Karunakaran Tue, 08 Sept 2020 11:58:32 AM
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியிருப்பினும், மக்கள் பயன்பாட்டுக்கு இன்னும் வரவில்லை.
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது, உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,016 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் தற்போது 2 கோடியே 74 லட்சத்து 78 ஆயிரத்து 134 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 70 லட்சத்து 9 ஆயிரத்து 235 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறனர். இவர்களில், 60 ஆயிரத்து 337 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனாவில் இருந்து 1 கோடியே 95 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.
இருப்பினும் உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 8 லட்சத்து 96 ஆயிரத்து 406 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் இதுவரை கொரோனா காரணமாக 1,93,534 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில், இந்தியா கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகளாக உள்ளன.