மூணாறு ராஜமலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆக அதிகரிப்பு
By: Karunakaran Tue, 11 Aug 2020 6:22:11 PM
தென்மேற்கு பருவமழை காரணமாக தற்போது கேரளாவில் பலத்த கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ராஜமலை, பெட்டிமுடி பகுதியில் தொடர் மழை கொட்டித்தீர்த்த வண்ணம் உள்ளது. மேலும் அங்குள்ள குடியிருப்பு அருகே உள்ள கல்லார் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
கடந்த 7-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, 300 அடி உயரம் கொண்ட பெட்டிமுடி மலையில் 150 அடி சரிந்து ராட்சத பாறைகள் உருண்டன. இதனால் அதிகாலை நேரத்தில் வீடுகளில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த 78 பேரும் மணலுக்குள் புதைந்து விட்டனர். நிலச்சரிவில் இருந்து உயிர் தப்பிய 3 பேர் இதுகுறித்து மீட்பு படையினருக்கு தகவல் அளித்தனர்.
இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன், மாநில காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய 4-வது நாள் மீட்புப் பணியின்போது மொத்தம் 49 சடலங்கள் மீட்கப்பட்டது. இன்று ஐந்தாவது நாள் மீட்புப்பணி நடைபெற்றபோது, மேலும் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டது.
இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. தீயணைப்பு படையைச் சேர்ந்த 120 பேர், தேசிய பேரிடர் மீட்புக்குழுவை சேர்ந்த 85 பேர், சுகாதாரத் துறையினர் 100 பேர், வனத்துறையினர் 50 பேர், 200 போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.