கொரோனா பாதிப்பிலிருந்து டெல்லி சுகாதாரத்துறை மந்திரி பூரண குணமடைந்தார்
By: Karunakaran Sat, 27 June 2020 11:10:26 AM
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. தலைநகர் டெல்லியிலும் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்தர் ஜெயினுக்கு திடீரென கடுமையான காய்ச்சல் மற்றும் உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்தது. இதனால் அவர் ராஜீவ்காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அங்கு அவருக்கு நடத்திய பரிசோதனையில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் அவருக்கு நிமோனியாவும் இருந்ததால், அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும், உடல்நிலையில் எந்தவித முன்னேற்றம் ஏற்படவில்லை.
அதன்பின் அவர், டெல்லியில் உள்ள மேக்ஸ் என்ற தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டபின் அவருடைய உடல்நிலை சீராக அமைந்தது. பின்னர் தற்போது அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இந்த கொரோனா பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பில் இருந்து சத்யேந்திர ஜெயின் குணமடைந்து நேற்று ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு வீடு திரும்பினார்.