திரைவானத்தை சோகமயமாக்கிய பாடும் நிலாவின் மறைவு
By: Nagaraj Fri, 25 Sept 2020 2:50:22 PM
திரைவானத்தை சோகத்தில் ஆழ்த்திய பாடும் நிலாவான எஸ்.பி.பி.யின் மறைவுக்கு அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல பின்னணிப் பாடகரும், நடிகருமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று காரணமாக இன்று உயிரிழந்தார். ஸ்ரீபதி பண்டிதரதயுல பாலசுப்ரமணியம் என்கிற எஸ்.பி.பாலசுப்ரமணியம் பிறந்தது, ஆந்திராவில் உள்ள கொனேட்டாம் பேட்டை என்ற ஊரில்தான். எஸ்.பி.பியின் தந்தை எஸ்.பி.சம்பமூர்த்தி, தாய் சகுந்தலம்மா. இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள் எஸ்.பி.பி-யின் உடன்பிறந்தவர்கள்.
திருப்பதியில் படிப்பை முடித்த பின் எஸ்.பி.பி. பாடல் மீதிருந்த ஆர்வத்தில் வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தார். படிக்கும் போதே இசைப்போட்டிகளில் கலந்துகொண்டு பல பரிசுகளை பெற்றிருந்த எஸ்.பி.பி.க்கு திரைத்துறை ஆர்வத்தை ஏற்படுத்தியது, 1964-ல் தெலுங்கு கலாச்சார நிறுவனம் நடத்திய இசை நிகழ்ச்சியில் முதல் பரிசு வென்றது தான் திரையுலகை நோக்கி அவரை நகர்த்தியது.
1966 முதல் தெலுங்கு, கன்னட படங்களுக்கு பாடல்கள் பாடிவந்தவருக்கு, தமிழில் வாய்ப்பு கிடைத்தது 1969-ல்தான்.
தமிழில்,
ஜெமினி கணேசன் நடித்த "சாந்தி நிலையம்" திரைப்படத்தில்தான் எஸ்.பி.பிக்கு
முதலில் வாய்ப்பு கிடைத்தது. "இயற்கை என்னும் இளைய கன்னி" என் பாடலைப்
பாடினார். ஆனால், "சாந்தி நிலையம்" வெளியாவதற்கு முன்பே, எம்.ஜி.ஆர் நடித்த
'அடிமைப்பெண்' திரைப்படம் வெளியானதால், எஸ்.பி.பி-யை உலகிற்கு அறிமுகம்
செய்துவைத்தது "ஆயிரம் நிலவே வா" பாடலே!
தமிழ் மட்டுமின்றி பல
மொழிகளில் தொடர்ந்து பாடி வந்த ஓய்வறியாத அந்த பாடும் நிலா இசை ரசிகர்களை
சோகக்கடலில் ஆழ்த்திவிட்டு திரைவானை கண்ணீர் மூழ்க அடித்து கொரோனா என்ற
கொடியவனால் துயரப்பட்டு மறைந்துள்ளது. இந்த இழப்பு இந்தியாவையே வெகுவாக
சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.