ஐரோப்பாவுடன் பொருளாதாரம் வலுப்படும்; பிரதமர் மோடி நம்பிக்கை
By: Nagaraj Wed, 15 July 2020 7:54:41 PM
ஐரோப்பாவுடன் பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் வலுப்படும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றினார். இது தொடர்பாக பிரதமர், “இந்த உச்சிமாநாடு ஐரோப்பாவுடனான நமது பொருளாதார மற்றும் கலாச்சார தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்” என்று ட்வீட் செய்திருந்தார்.
இந்த உச்சிமாநாடு இரு தரப்பு உறவுகளை வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விரிவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று 27 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
உச்சிமாநாட்டில் தனது உரையில் பிரதமர் மோடி பேசியதாவது:
இந்தியாவும்
ஐரோப்பிய ஒன்றியமும் இயற்கையான கூட்டாளிகள். நம் கூட்டாண்மை உலகில் அமைதி
மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பயனுள்ளதாக இருக்கும். இன்றைய உலகளாவிய
சூழ்நிலையில் இந்த உண்மை இன்னும் தெளிவாகியுள்ளது. இந்தியா மற்றும்
ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய இரண்டும் ஜனநாயகம், பன்மைத்துவம், உள்ளடக்கம்,
சர்வதேச நிறுவனங்களுக்கு மரியாதை, பன்முகத்தன்மை, சுதந்திரம் மற்றும்
வெளிப்படைத்தன்மை போன்ற உலகளாவிய மதிப்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன.
ஐரோப்பிய
ஒன்றியமும் அதன் நாடுகளும் எடுத்த கொரோனா கருவிகளுக்கான அணுகலை
விரைவுபடுத்துவதற்கான முன்முயற்சியை நாங்கள் ஆதரிக்கிறோம். இந்த உலகளாவிய
முயற்சியில் பங்களிக்க இந்தியாவின் மருந்து நிறுவனங்கள் தயாராக உள்ளன.
இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய கூட்டாண்மை பொருளாதார புனரமைப்பு மற்றும் மனித
மையப்படுத்தப்பட்ட உலகமயமாக்கலை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்க
முடியும்.
தற்போதைய சவால்களைத் தவிர, காலநிலை மாற்றம் போன்ற நீண்ட
கால சவால்களும் நம் இருவருக்கும் முன்னுரிமை. இந்தியாவில்
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிப்பதற்கான எங்கள்
முயற்சிகளில், ஐரோப்பாவின் முதலீடு மற்றும் தொழில்நுட்பத்தை அழைக்கிறோம்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.