டெல்லி வந்து சேர்ந்தார் எகிப்து அதிபர்... சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
By: Nagaraj Tue, 24 Jan 2023 10:41:20 PM
டெல்லி: குடியரசு தினத்தில் பங்கேற்பதற்காக டெல்லிக்கு வந்து சேர்ந்துள்ளார் எகிப்து அதிபர்.
இந்தியாவின் 73வது குடியரசு தினம் வரும் 26ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. குடியரசு தினத்தன்று டெல்லி டியூட்டி ரூட்டில் முப்படை அணிவகுப்பு நடத்தப்படும்.
குடியரசு தின விழாவின் முன் வரிசை இருக்கைகள் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்டிய தொழிலாளர்கள், சைக்கிள் ரிக்ஷாக்காரர்கள், சுமை தூக்குபவர்கள், காய்கறி விற்பனையாளர்கள் மற்றும் பால் விற்பனையாளர்கள் உட்பட சாதாரண மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.
பொதுவாக குடியரசு தின விழாவின் போது வெளிநாடுகளில் இருந்து முக்கிய தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு குடியரசு தின விழாவுக்கு சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் படா எல் சிசி அழைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக எகிப்து அதிபர் எல் சிசி இன்று இந்தியா வந்துள்ளார்.
தனி விமானம் மூலம் டெல்லி வந்த அவரை அதிகாரிகள் வரவேற்றனர். இந்த பயணத்தின் போது, குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக வரும் எகிப்து அதிபர் எல் சிசி, இந்திய அதிபர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரை சந்திக்கிறார்.