ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை செயல்படுத்த, தேர்தல் ஆணையம் தயார்
By: Nagaraj Tue, 22 Dec 2020 3:46:46 PM
தேர்தல் ஆணையம் தயார்...''தேவையான சட்ட திருத்தங்கள் செய்யப்பட்டால், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை செயல்படுத்த, தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது,'' என, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.
நாடு முழுதும் உள்ள மாநிலங்களில் சட்டசபை தேர்தல், இடைத்தேர்தல் என, ஆண்டுதோறும் தேர்தல் நடந்துக் கொண்டேயிருக்கின்றன. பிரதமர் மோடி, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், 'அடிக்கடி தேர்தல்கள் நடப்பதால், நாட்டின் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கின்றன.
இதனால் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த, மத்திய அரசு விரும்புகிறது' என்றார். இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற பிரதமரின் திட்டத்தை, தேர்தல் ஆணையம் ஏற்கிறது.
தேவையான
சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால், இந்த திட்டத்தை வெற்றிகரமாக
செயல்படுத்தவும், தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது.முடிவுகொரோனா பரவலால்,
தேர்தல் பணிகள் பாதிக்க கூடாது என்பதில், தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது.
அதனால் தான், கொரோனா தடுப்பு நடவடிக்கைளுடன், பீஹார் சட்டசபை மற்றும்
பல்வேறு மாநிலங்களில், 59 தொகுதிகளில் இடைத்தேர்தல்களை, தேர்தல் ஆணையம்
வெற்றிகரமாக நடத்தியது.
அடுத்த கட்டமாக, தமிழகம், கேரளா, மேற்கு
வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான பணிகளை,
தேர்தல் ஆணையம் துவக்கியுள்ளது. தேர்தல் தேதிகள் குறித்து, சம்பந்தப்பட்ட
மாநில கல்வித்துறை அதிகாரிகளுடன், தேர்தல் அதிகாரிகள் பேசி வருகின்றனர்.
பள்ளி தேர்வுகளை பொறுத்து, தேர்தல் தேதிகள் முடிவு செய்யப்படும். இவ்வாறு,
அவர் கூறினார்.