சென்னையில் முழு ஊரடங்கு கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது; காவல் ஆணையர் தகவல்
By: Nagaraj Sun, 21 June 2020 3:56:25 PM
கடுமையான கட்டுப்பாடுகள்... சென்னையில் முழு ஊரடங்கு எந்தவித தளர்வுகளுமின்றி கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருவதாக மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பூக்கடை, ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காவல் ஆணையர் ஏ.கே விசுவநாதன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முழு ஊரடங்கிற்கு பொது மக்கள் போதிய ஆதரவு தந்து வருவதாகவும் அரசின் வலியுறுத்தலை உணர்ந்து காவல்துறையினருக்கு தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இன்று அனைத்து உயர் அதிகாரிகளும் நேரடியாக சென்னை முழுவதும் களத்திற்கு
சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறிய அவர், மக்கள் தொகை
அடர்த்தியாக உள்ள பகுதிகளில் ஒலிப்பெருக்கி மூலம் தொடர்ந்து வெளியே
வரவேண்டாம் என வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய
அவர், காவல்துறையினர் கடுமை காட்டுவது மக்களின் நலனுக்காக தான் என புரிந்து
கொள்ளவேண்டும் என்றும் யார் மீதும் தனிப்பட்ட கோபமோ கடுமை காட்ட
வேண்டுமென்ற எண்ணமும் கிடையாது என தெரிவித்தார்.
இந்த 12 நாள்
மக்களுக்கு சிரமமாகத்தான் இருக்கும் எனினும் சிறிதுகாலம் இந்த சிரமத்தை
பொறுத்துக் கொண்டால் தான் நாம் இந்த நோய் தொற்றிலிருந்து மீண்டு வழக்கமான
வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
எனவும் காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் குறிப்பிட்டார்.