கொரோனா காலத்திலும் ஊதியத்தை குறைக்காமல் கொடுத்து வரும் விவசாயி
By: Nagaraj Sat, 01 Aug 2020 10:57:40 AM
வியாபாரம் குறைவாக இருந்த நிலையிலும் தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளத்தை குறைக்காமல் கொடுத்து வந்துள்ளார் திண்டுக்கல்லை சேர்ந்த விவசாயி ஒருவர்.
ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு தலைதூக்கியுள்ள கொரோனா ஊரடங்கு காலத்தில், திண்டுக்கலைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தடைகளை கடந்து தனது பணியாளர்களுக்கு முழு சம்பளம் அளிப்பதோடு, பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாதவாறு பணியிடத்தை பாதுகாப்பாக வைத்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் பத்து லட்சம் ஒட்டு ரகம் முருங்கை செடிகளை விற்பனை செய்துவருகிறார் திண்டுக்கல் பள்ளபட்டியைச் சேர்ந்த முருங்கை விவசாயி அழகர்சாமி. குறைந்தது 50,000 முதல் ஒரு லட்சம் செடிகள் ஒவ்வொரு மாதமும் விற்றுவிடும் என்ற நம்பிக்கையில் பல்லாயிரம் செடிகளை தயாராக வைத்திருந்தார் அழகர்சாமி.
கொரோனா ஊரடங்கு காலத்தில், முருங்கை செடிகளை விற்பதில் சரிவு இருந்தாலும்,
தனது பணியாளர்களின் சம்பளத்தை அவர் குறைக்கவில்லை. மாறாக, அவர்கள் உடல்நலன்
மீது அக்கறை எடுத்துக்கொண்டதாக சொல்கிறார். ''தினமும் முருங்கை இலை சூப்,
கபசுரக்குடிநீர் மற்றும் இஞ்சி தேநீர் குடிக்கிறோம். கொரோனாவால் முருங்கை
செடிகளை விற்பதில் சரிவு ஏற்பட்டது.
ஆனால் என்னுடன் வேலை
செய்பவர்களுக்கு முழு சம்பளம் தருகிறேன். 50 பெண்கள், 20 ஆண்கள் என 70 பேர்
வேலை செய்கிறார்கள். தினக்கூலியாக ரூ.300 முதல் ரூ.400 வரை பெறுகிறார்கள்.
சுமார் 20 ஆண்டுகளாக என்னிடம் வேலை செய்கிறார்கள். இவர்கள் என் குடும்ப
உறுப்பினர்கள் போன்றவர்கள். நான் எப்படி சம்பளத்தை குறைப்பேன்?,''என்கிறார்
அழகர்சாமி.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம்
பெற்றுள்ள அழகர்சாமி, சுமார் ஏழு ஆண்டுகள் முயற்சி செய்து புதிய முருங்கை
வகை ஒன்றை உருவாக்கி, அதில் ஒட்டு செடிகளைத் தயாரித்து, முருங்கை பயிர்
செய்பவர்களுக்கு செடிகளை விற்பனை செய்கிறார். அவர் உருவாக்கிய முருங்கை
ரகத்தின் பெயர் -பிஏவிஎம்(PAVM-பள்ளப்பட்டி அழகர்சாமி வெள்ளிமலை முருகன்)
ஆகும். இயற்கை வேளாண்மையை அதிகம் ஊக்குவித்த நம்மாழ்வார் தான் பிஏவிஎம்
ரகத்தை பிரபலப்படுத்தினார் என்கிறார் அழகர்சாமி.
தமிழகம்
மட்டுமல்லாது, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநில விவசாயிகளும் இவரது
முருங்கை ரகத்தை வாங்கிச் செல்வதாக கூறுகிறார். சமீபமாக நைஜீரியாவுக்கும்
முருங்கை செடிகளை அனுப்புயிருக்கிறார்.