ஐந்தாம் கட்ட ஊரடங்கில் தெரிவிக்கப்பட்டுள்ள 3 கட்ட தளர்வுகள்
By: Nagaraj Sat, 30 May 2020 9:49:07 PM
5ம் கட்ட ஊரடங்கு அறிவிப்பை இன்று வெளியிட்ட மத்திய அரசு இதில் பல தளர்வுகள் குறித்து அறிவித்துள்ளது. இந்த தளர்வுகள் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. எவ்வித தளர்வுகளும் இல்லை. மற்ற பகுதிகளில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கின் போது அவசர அத்தியவசிய தேவைகளை தவிர இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மக்கள் யாரும் வெளியே வரக்கூடாது.
இதில் முதல்கட்ட தளர்வுகள் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வரும் ஜூன் 8 முதல் ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் வழிபாட்டு தலங்கள் திறக்க கோரி பக்தர்கள் போராட்டங்கள் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்தான் இந்த 5ம் கட்ட ஊரடங்கில் முதல் தளர்வாக வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட தளர்வுகளில் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் திறப்பு குறித்து மாநில அரசுகளின் ஆலோசனைக்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் கட்ட தளர்வில் சினிமா, பொழுதுபோக்கு பூங்கா, உடற்பயிற்சி கூடங்கள், மெட்ரோ ரயில்கள், நீச்சல் குளங்கள் ஆகியவை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30 வரை எந்த தளர்வுகளும் கிடையாது. பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் கூறப்பட்டுள்ளது.