தமிழகத்தில் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதல் பிளாஸ்மா வங்கி திறப்பு
By: Nagaraj Wed, 22 July 2020 9:38:40 PM
முதல் பிளாஸ்மா வங்கி... கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் முதல் பிளாஸ்மா வங்கி சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் இந்த நோய் தொற்றிற்கு இதுவரையில் மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஆனால், ரத்தத்தில் இருந்து பிரித்தெடுக்கப்படும் பிளாஸ்மா, கொரோனா தொற்றுக்கு எதிராக நல்ல பலனை ஆற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸமா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனாவை விரட்ட பிளாஸ்மா தானத்தை வழங்க தகுதியானவர்கள் முன்வர வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.2.34 கோடி செலவில்
பிளாஸ்மா வங்கி திறக்கப்படும் எனவும் அறிவித்திருந்தார். அதன்படி, நவீன
மருத்துவ உபகரணங்களுடன் கூடிய பிளாஸ்மா வங்கியை சுகாதாரத்துறை அமைச்சர்
விஜயபாஸ்கர் இன்று திறந்து வைத்தார். டெல்லிக்கு அடுத்து தமிழகத்தின்
முதன்மையான பிளாஸ்மா வங்கி இதுவாகும்.
கொரோனாவில் இருந்து
மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் வழங்கலாம். நோய் தொற்றில் இருந்து மீண்ட ஒருவர்
14 நாட்களுக்கு பிறகு பிளாஸ்மா தானம் செய்யலாம். 18 முதல் 60
வயதுக்குட்பட்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய தகுதியானவர்கள். அதேவேளையில்,
உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய் இருப்பவர்கள் பிளாஸ்மா
தானம் வழங்க முடியாது.