மிகவும் உயரமான மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முதல் உணவகம் அடுத்த மாதம் திறப்பு
By: Karunakaran Wed, 16 Sept 2020 2:10:34 PM
அமீரகத்தின் வடக்கு பகுதியில் உள்ள முக்கிய நகரமான ராசல் கைமாவில்ல உள்ள ஜெபல் ஜைஸ் மலைப்பகுதியானது பல்வேறு வகைகளில் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இது மொத்தம் 6 ஆயிரத்து 500 அடி உயரமானதாகும். இதனால் அமீரகத்தில் இருந்தும், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்த மலைப் பகுதியை காண சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகின்றனர். சாகசத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் இந்த மலை பகுதிக்குத்தான் செல்ல வேண்டும்.
இந்நிலையில் இந்த மலைப்பகுதியில் ஒரு முக்கிய அம்சமாக உணவகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகம் அடுத்த மாதம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த உணவகம் மிகவும் உயரமான மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முதல் உணவகம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த உணவகம் கடல் மட்டத்தில் இருந்து 1,484 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய உணவகம் ஜெய்ஸ் சாகச மையத்தின் அருகாமையில் அமைந்துள்ளது. ஹஜர் மலைத்தொடரில் பள்ளத்தாக்குகள் மத்தியில் மிகவும் ரம்மியமான சூழலில் இந்த உணவகம் அமைகிறது. உணவகத்தின் தரைதளத்தில் கண்ணாடிகள் பதிக்கப்பட்டிருப்பதால் தரையில் உள்ள செடிகள் உள்ளிட்டவற்றை காணும் வாய்ப்புள்ளது. ஜெபல் ஜைஸ் மலைப் பகுதியில் உள்ள பல்வேறு பொழுது போக்கு இடங்கள் ஒரு திகில் அனுபவத்தை ஏற்படுத்தக்கூடியது.
இதுகுறித்து உணவு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அலிசன் கிரின்னெல் கூறுகையில், இந்த புதிய உணவகம் பார்வையாளர்களுக்கு ஒரு மறக்க முடியாத நினைவுகளை கொடுக்கும். உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் வழிமுறைக்கு ஏற்ப சுகாதார விதிமுறைகள் பின்பற்றப்படும். கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் இது செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.