இஸ்ரேல் வரலாற்றில் முதன்முறை; ஊழல் வழக்கு விசாரணைக்காக பிரதமர் கோர்டில் ஆஜராகிறார்
By: Nagaraj Sun, 24 May 2020 10:55:39 AM
பதவியில் இருக்கும் பிரதமர் ஒருவர், ஊழல் வழக்கில் சிக்கி, நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராவது இஸ்ரேலில் இதுவே முதல் முறை. விஷயம் இதுதான் தன் மீதான ஊழல் வழக்கு விசாரணைகளுக்காக இன்று நீதிமன்றத்தில் பிரதமர் பெஞ்சமின் ஆஜராகிறார்.
மேற்காசிய நாடான இஸ்ரேலின் பிரதமராக, 2009ல் இருந்து பதவி வகிப்பவர் பெஞ்சமின் நேதன்யாஹு (70). இஸ்ரேலில் நீண்ட காலம் பிரதமராக இருப்பவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
சமீபத்தில் நடந்த தேர்தலில், இவரது கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், பிரதான எதிர்க்கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்து, மீண்டும் பிரதமராகியுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளாகவே, நேதன்யாஹுவுக்கு எதிராக பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன. விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. தனக்கு சாதகமாக செய்தி வெளியிடுவதற்காக ஊடக முதலாளிகளுக்கு பணம் கொடுத்தது.
தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு சாதகமான திட்டங்களை செயல்படுத்துவதற்காக, அந்த நிறுவனங்களிடமிருந்து பரிசு என்ற பெயரில் லஞ்சம் வாங்கியது ஆகிய குற்றச்சாட்டுகள் குறித்து, இஸ்ரேல் மாவட்ட நீதிமன்றம், அவரை விசாரித்து வருகிறது.
இந்நிலையில், பாதுகாப்பு படையினர் புடைசூழ, பெஞ்சமின் நேதன்யாஹு, இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார். பதவியில் இருக்கும் பிரதமர் ஒருவர், ஊழல் வழக்கில் சிக்கி, நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராவது, இஸ்ரேலில் இதுவே முதல் முறை. இதனால், இஸ்ரேல் மக்களிடையே, நேதன்யாஹு மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.