- வீடு›
- செய்திகள்›
- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 1 லட்சத்து 85 ஆயிரம் கனஅடியாக உயர்வு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 1 லட்சத்து 85 ஆயிரம் கனஅடியாக உயர்வு
By: vaithegi Wed, 31 Aug 2022 4:03:32 PM
மேட்டூர் : ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து இன்று காலை மட்டும் வினாடிக்கு 1 லட்சத்து 85 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.
இதை அடுத்து அணையின் முழு கொள்ளளவான 120 அடியாக நீடிப்பதால் அணைக்கு வரும் தண்ணீர் கடந்த சில நாட்களாக அப்படியே காவிரியில் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து 23 ஆயிரம் கன அடி தண்ணீர் நீர்மின் நிலையங்கள் வழியாகவும், 1 லட்சத்து 62 ஆயிரம் கன அடி தண்ணீர் 16 கண் மதகான உபரி நீர் போக்கி வழியாகவும், 400 கன அடி தண்ணீர் கால்வாயிலும் என மொத்தம் 1 லட்சத்து 85 ஆயிரத்து 400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
எனவே இதனால் மேட்டூர் காவிரியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அனல் மின் நிலையம் அருகே காவிரி ஆற்றையொட்டி விவசாய நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
மேலும் அனல் மின் நிலையம் அருகே செல்லும் மேட்டூர்-எடப்பாடி நெடுஞ்சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. வருவாய்த்துறையினர், காவல்துறையினர் இணைந்து நேற்று இரவு முதல் இந்த பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளனர்.
மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் அதிகரித்து வருவதால் வெள்ளக்கட்டுப்பாட்டு அறையில் மேட்டூர் அணை உதவி பொறியாளர் மதுசூதனன் மேற்பார்வையில் ஒரு உதவி பொறியாளர், 2 மேற்பார்வையாளர்கள் உதவியாளர்கள் என 24 பேர் தயார் நிலையில் உள்ளனர்.