போலி காசோலை கொடுத்து போர்ஷே ஆடம்பர கார் வாங்கி ஏமாற்றியவர் சிக்கினார்
By: Nagaraj Wed, 05 Aug 2020 8:51:49 PM
போலி காசோலை... அமெரிக்காவில், வீட்டில் அச்சடித்த போலி காசோலையைக் கொடுத்து ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள போர்ஷே ஆடம்பர கார் வாங்கி ஏமாற்றியுள்ளான் பலே திருடன் ஒருவன்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த வால்டன் கவுண்டி சேர்ந்தவன் கேஸே வில்லியம் கெல்லி (42). கடந்த மாதம் 27 - ம் தேதி போர்ஷே கார் ஷோ ரூமுக்குச் சென்று, $139,203 மதிப்புள்ள காசோலையைக் கொடுத்து ’போர்ஷே 911 டர்போ’ காரை வாங்கியுள்ளான். இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு கோடி ரூபாய் விலைகொண்டது அந்த கார்.
கார் டீலர் காசோலையை வங்கிக்கு அனுப்பி வைத்த பிறகுதான், அந்தக் காசோலை போலியானது என்று தெரியவந்தது. பதறிய கார் டீலர், ஒரு கோடி ரூபாய் மதிக்கத்தக்க காரை வில்லியம் கெல்லி திருடிவிட்டதாக போலிசில் புகார் கொடுத்தார். போலீஸார் திருடனைத் தேடத் தொடங்கினர்.
ஆனால், அவன் போலியான முகவரியைக் கொடுத்ததால் திருடன் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த
நிலையில் தான், திருடப்பட்ட போர்ஷே காருடன் போஸ் கொடுத்து அந்த
புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் ‘பதிவேற்றினான் வில்லியம். இந்தப்
புகைப்படம் மூலம் விலியம்மின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்த போலிசார் அவனைக்
கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.
இதற்கிடையே, சுமார் 46
லட்சம் ரூபாய் அளவுக்குப் போலி காசோலை கொடுத்து மியாமி பகுதியிலுள்ள உள்ள
நகைக்கடை ஒன்றில் 3 ரோலக்ஸ் கைக்கடிகாரங்களை வாங்கவும் அவன் முயற்சி
செய்துள்ளது தெரியவந்துள்ளது. ஆனால், கடைகாரர் சுதாரித்துக் கொண்டு
போலீஸசுக்கு தகவல் அளித்தார். இந்த சம்பவம் குறித்து வில்லியம் கெல்லியைக்
கைது செய்து விசாரணை செய்தபோதுதான் அவன் வீட்டிலேயே போலியான காசோலைகளை
அச்சடித்து ஏமாற்றியது தெரியவந்தது.