இந்தியா தலைமையில் டெல்லியில் நாளை ஜி20 உச்சி மாநாடு தொடக்கம்
By: vaithegi Fri, 08 Sept 2023 11:42:21 AM
புதுடெல்லி: ஜி20 அமைப்பின் 18-வது உச்சி மாநாடு, இந்தியா தலைமையில் டெல்லியில் நாளை தொடங்குகிறது. இதை முன்னிட்டு, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று அளித்த பேட்டியில் பேசியதாவது:
ஜி20 உச்சி மாநாட்டை இந்தியா நடத்துவது முக்கியமானது, வரலாற்று சிறப்புமிக்கது மற்றும் இந்தியாவுக்கு பொன்னானதருணம். உலக நன்மைக்காக இதில் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. அதனால்தான் ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’’ என்பது ஜி 20 உச்சி மாநாட்டின் முழக்கமாகவுள்ளது.
பொருளாதாரத்தின் நிலையான வளர்ச்சி மீது பிரதமர் மோடி கவனம் செலுத்துகிறார். இது போருக்கான காலம் அல்ல என அவர் கூறினார். இதையடுத்து அவரது எண்ணங்கள் உலகளவில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இந்த ஜி20 உச்சி மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் மூலம் உலக நாடுகள் பயன் அடையும். பிரதமர் மோடி தலைமையில் கடந்த சில ஆண்டுகளாக நாடு முன்னணியில் உள்ளது.
இந்தியா கூறுவதை உலகநாடுகள் கேட்கின்றன. கரோனா காலத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் மற்றும் இதரதேவையான மருந்துகள் பல நாடுகளுக்கு அனுப்பியதன் மூலம் உலகளவில் முக்கியமான பொறுப்பை இந்தியா நிறைவேற்றிள்ளது என அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறினார்.