கடைசி நேரத்தில் மாறிய ஆட்டம்; சூப்பர் ஓவரில் டெல்லி அணி வென்றது
By: Nagaraj Sun, 20 Sept 2020 11:49:05 PM
தில்லி கேபிடல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையிலான ஆட்டம் சமனில் முடிவடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து சூப்பர் ஓவர் நடந்தது. இதில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் தில்லி, பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி, முதலில் பேட் செய்த தில்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது.
158 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் மற்றும் அகர்வால் களமிறங்கினர். முதல் 4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்து நல்ல நிலையிலிருந்தது. மோஹித் சர்மா வீசிய 5-வது ஓவரில் ராகுல் 21 ரன்களுக்கு போல்டானார்.
அடுத்த ஓவரை வீசிய அஸ்வின் முதல் பந்தில் கருண் நாயரையும், 5-வது பந்தில் நிகோலஸ் பூரனையும் வீழ்த்தினார். இதனால், ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. ஆனால், தில்லிக்குத் திருப்புமுனையாக அந்த ஓவரின் கடைசி பந்தில் அஸ்வின் காயமடைந்தார். இதன்பிறகு, அவர் பந்துவீச வரவில்லை.
பின்னர் பஞ்சாப் அணி 35 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அடுத்து களமிறங்கிய சர்பிராஸ் கானும் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து, அகர்வாலுடன் கௌதம் இணைந்தார். அகர்வால் படிப்படியாக அதிரடிக்கு மாறத் தொடங்கினார். கௌதமும் மோஹித் ஓவரில் சிக்ஸரும் பவுண்டரியும் அடித்து மிரட்டினார். ஆனால் அடுத்த ஓவரிலேயே அவரும் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
கடைசி 3 ஓவரில் தில்லியின் வெற்றிக்கு 42 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.
18-வது ஓவரை மோஹித் சர்மா வீச அகர்வால் 2 சிக்ஸர்கள் அடித்து அசத்த அந்த
ஓவரில் 17 ரன்கள் கிடைத்தது. அதேசமயம், அகர்வாலும் அரைசதத்தைக் கடந்தார்.
இதன்மூலம், கடைசி 2 ஓவர்களில் 25 ரன்கள் தேவை என்ற நிலை ஆனது.
19-வது
ஓவரை ரபாடா வீச 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் அகர்வால். 4-வது
பந்தை மீண்டும் பவுண்டரிக்கு விரட்ட முயற்சிக்க, ஷ்ரேயஸ் ஐயருக்கு கேட்ச்
வாய்ப்பாக அமைந்தது. ஆனால், அதை ஷ்ரேயஸ் தவறவிட அதுவும் பவுண்டரி ஆனது.
இதன்மூலம், இந்த ஓவரிலும் 12 ரன்கள் கிடைக்க, கடைசி ஓவரில் வெற்றிக்கு 13
ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
கடைசி ஓவரை ஸ்டாய்னிஸ் வீச முதல்
பந்தையே சிக்ஸருக்குப் பறக்கவிட்டார் அகர்வால். 2-வது 2 ரன்கள், 3-வது
பந்தில் பவுண்டரி அடிக்க ஸ்கோர் சமநிலை எட்டியது. ஸ்டாய்னிஸ் 4-வது பந்தை
பவுன்சராக வீச ரன் ஏதும் கிடைக்கவில்லை. ஆட்டத்தில் மற்றுமொரு ட்விஸ்டாக
அகர்வால் 5-வது ஆட்டமிழந்தார். அவர் 60 பந்துகளில் 89 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து,
கடைசி பந்தில் 1 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை உருவாகி ஆட்டம் உச்சகட்ட
பரபரப்பை எட்டியது. ஆனால், கடைசி பந்தில் ஜார்டனும் ஆட்டமிழக்க ஆட்டம்
சமனில் முடிந்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணியும் 8
விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து, சூப்பர்
ஓவர் கடைபிடிக்கப்பட்டது. இதில் பஞ்சாப் அணி 2 ரன்கள் எடுத்த நிலையில் 2
விக்கெட்டுகள் விழுந்தது.
இதனால் ஆட்டம் டெல்லி அணி பக்கம்
மாறியது. 6 பந்துகளில் 3 ரன்கள் எடுத்தால் போதும் என்று சூப்பர் ஓவருக்கு
களமிறங்கிய டெல்லி அணி 3 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.