பொதுத் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்; துணை பிரதமர் வலியுறுத்தல்
By: Nagaraj Sun, 16 Aug 2020 4:35:03 PM
தேர்தலை தள்ளி வைக்க வலியுறுத்தல்... நியூசிலாந்தில் செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்ட பொதுத் தேர்தலை தள்ளிவைக்குமாறு துணைப் பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அழைப்பு விடுத்தார்.
நாட்டில் கொரோனா தொற்றின் பரவல் திடீரென மீண்டும் அதிகரித்தமையின் காரணமாக, பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் மீது தேர்தலை ஒத்திவைக்க வேண்டி அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றது. 102 நாட்களாக புதிய கொரோனா தொற்று நோயாளிகள் எவரும் அடையாளம் காணப்படாததை அடுத்து செப்டம்பர் 19 அன்று “சுதந்திரமானதும் நியானதுமான தேர்தலை” நடத்த அரசாங்கம் தீர்மானித்தது.
இருப்பினும் கடந்த வாரம் அக்லாந்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்த காரணத்தினால் தேர்தலை நடத்துவதை ஒத்திவைக்குமாறு பலர் கோரிக்கை விடுத்துவருகின்றனர். இந்நிலையிலேயே வின்ஸ்டன் பீட்டர்ஸ் ஆர்டெர்னுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
2017 தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி ஒப்பந்தத்தின் மூலம் ஆர்டெர்னின்
தொழிற்கட்சிக்கு அரசாங்கத்தை வழங்கிய பீட்டர்ஸ், தேசிய அல்லது தொழிலாளர்
கட்சிகளுக்கு பெரும்பான்மையை வழங்கத் தவறியதால், ஒக்டோபர் 17 மற்றும்
நவம்பர் 21 ஐ மாற்று திகதிகளாக பரிந்துரைத்தார்.
இருப்பினும் இன்று
ஞாயிற்றுக்கிழமை, நியூசிலாந்தில் 13 உறுதிப்படுத்தப்பட்ட தொற்று நோயாளிகள்
அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து தற்போது 69 நோயாளிகள் தொடர்ந்தும் சிகிச்சை
பெற்றுவருகின்றனர்.
இதனை அடுத்து 1.7 மில்லியன் மக்கள்தொகை கொண்ட
நாட்டின் மிகப்பெரிய நகரமான அக்லாந்தை ஆர்டெர்ன் கடந்த வாரம் இரண்டு வார
முடக்க நிலையின் கீழ் வைத்தார். இந்நிலையில் பொதுத்தேர்தலை
தள்ளிவைப்பதற்க்கான அறிவிப்பினை எதிர்வரும் திங்கட்கிழமை ஜசிந்தா ஆர்டெர்ன்
வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.