தொழில்நுட்ப தீர்வுகளுக்கான சந்தையை அரசு வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது - பிரதமர் மோடி
By: Karunakaran Thu, 19 Nov 2020 1:26:58 PM
பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாடு மற்றும் கண்காட்சி பெங்களூருவில் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடி காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பல்வேறு நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகளுக்கான சந்தையை அரசு வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது என்றும், இது தொழில்நுட்பத்தை அனைத்து திட்டங்களின் முக்கிய பகுதியாக ஆக்கியிருப்பதாகவும் கூறினார். மேலும், ‘முதலில் தொழில்நுட்பம்’ என்பது தான் ஆட்சி நிர்வாகத்தின் மாடல் என குறிப்பிட்டார்.
பின்னர், பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடியூரப்பா குத்துவிளக்கு ஏற்றினார். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். துவக்க விழாவில் எடியூரப்பா பேசுகையில், 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட நாடு மற்றும் உலகளாவிய பொருளாதார சக்தியாக மாற்றுவதில் பிரதமர் தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுகிறார் என்று கூறினார்.
மேலும் அவர், இந்த பார்வையை நோக்கிய திட்டங்களில் கர்நாடகம் பங்கேற்றுள்ளது. கர்நாடக மாநிலத்தை முதலீட்டிற்கான மிகவும் கவர்ச்சிகரமான இடமாக மாற்றுவதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். குறிப்பாக உயர்நிலை தொழில்நுட்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என தெரிவித்தார்.