- வீடு›
- செய்திகள்›
- உண்மையான விவசாய அமைப்புகளுடன் தொடர்ந்து பேசி, தீர்வு காண அரசு தயார் - நரேந்திர சிங் தோமர்
உண்மையான விவசாய அமைப்புகளுடன் தொடர்ந்து பேசி, தீர்வு காண அரசு தயார் - நரேந்திர சிங் தோமர்
By: Karunakaran Wed, 16 Dec 2020 08:40:46 AM
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள், விவசாயிகளின் நலன்களுக்கு எதிரானவை என கருதி, அவற்றை திரும்பப்பெற வேண்டும் என்று வட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் குரல் கொடுத்து வருகின்றனர். இதில், சுமார் 40 விவசாய அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள், டெல்லியை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த 40 அமைப்புகளில் இடம்பெறாத ஒரு அமைப்பு உத்தரபிரதேசத்தை சேர்ந்த பாரதீய கிசான் யூனியன் ஆகும். இதன் பிரதிநிதிகள், மத்திய விவசாய மந்திரி நரேந்திர சிங் தோமரை நேற்று சந்தித்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள், வேளாண் சட்டங்கள் பற்றியும், குறைந்தபட்ச ஆதரவு விலை முறை தொடர்பாகவும் சில ஆலோசனைகளை கூறி உள்ளனர்.
இந்த சந்திப்பை தொடர்ந்து அந்த அமைப்பின் தலைவர் பவன் தாக்கூர் அளித்த பேட்டியில், வேளாண் சட்டங்கள் பற்றி மந்திரி விரிவாக விளக்கினார். அந்த சட்டங்கள் உண்மையிலேயே நல்ல சட்டங்கள் என உணர்ந்தோம். எங்களுக்கு சில சந்தேகங்கள் இருந்தன. அவற்றை மந்திரி தீர்த்துவைத்தார். எங்களுடைய கோரிக்கைகளை கவனிப்பதாகவும் அவர் தெரிவித்தார் என கூறினார்.
இதைத் தொடர்ந்து மத்திய விவசாய அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள பாரதீய கிசான் யூனியன் (கிசான்) அமைப்பினருக்கு மந்திரி தோமர் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இந்த சட்டங்களுக்கு ஆதரவு இருக்கிறது. மேலும், உண்மையான விவசாய அமைப்புகளை சேர்ந்தவர்களுடன் அரசு பேச்சு வார்த்தையை தொடர்வதற்கு தயாராக உள்ளது. திறந்த மனதுடன் தீர்வு காண்பதற்கும் தயாராக இருக்கிறது என மந்திரி தோமர் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.