சைபீரியாவில் ஏற்பட்ட பிரமாண்ட பள்ளம்; விஞ்ஞானிகள் குழப்பம்
By: Nagaraj Mon, 07 Sept 2020 11:12:07 AM
பிரமாண்ட திடீர் பள்ளம்... ரஷ்ய நாட்டின் சைபீரியாவில் உள்ள தந்த்ரா பகுதியில் திடீரென்று 100 அடி ஆழமும், 70 அடி விட்டமும் கொண்ட பிரமாண்டமான பள்ளம் தோன்றியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் மட்டும் இதுவரை ஒன்பது பிரமாண்ட பள்ளங்கள் தோன்றியுள்ள நிலையில், இதற்கான சரியான காரணத்தை அறிய முடியாமல் குழம்பி வருகின்றனர் விஞ்ஞானிகள்.
2013 - ம் ஆண்டில் வடமேற்கு சைபீரியாவில் யாமல் பெனின்சுலா பகுதியில் 70 அடி ஆழமும், 30 அகலமும் கொண்ட பிரமாண்ட பள்ளம் ஒன்று திடீரென்று தோன்றியது. அந்தப் பள்ளம் தோன்றியதற்கான உறுதியான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், வேற்றுக்கிரக வாசிகளின் விண்கலம் தரையிறங்கியதால் இந்தப் பள்ளம் தோன்றியிருக்கலாம் என்றும் நிலத்தடி ராணுவ நடவடிக்கைகள் காரணமாக இந்தப் பள்ளம் தோன்றியிருக்கலாம் என்றும் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன.
2013 - ம் ஆண்டுக்குப் பிறகு இந்தப் பகுதியில் அடுத்தடுத்து ஒன்பது பிரமாண்ட பள்ளங்கள் தோன்றின. திடீர் பள்ளங்கள் தோன்றுவதற்கான காரணத்தை அறிய விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். திடீர் பள்ளங்கள் தோன்றுவதற்குக் காலநிலை மாற்றங்கள் கூட காரணமாக இருக்கலாம் என்று சில விஞ்ஞானிகள் குழுவினர் தெரிவித்தனர்.
சைபீரியா நிலத்தடி பகுதியில் ஏராளமான அளவில் மீத்தேன் வாயுக்கள்
இருக்கின்றன. கால நிலை மாற்றத்தால் இந்தப் பகுதியில் வெப்பநிலை தொடர்ந்து
அதிகரித்து வருகிறது. அதனால், நிலத்தடியில் உள்ள மீத்தேன் வாயுக்கள் சூடேறி
ஒரேயிடத்தில் திரண்டு வெடித்து வெளியேறுவதால், இந்தப் பகுதியில் உள்ள தரை
வலிமையிழந்து உள்வாங்கி விடுகின்றன.
அதனாலேயே இந்தப் பகுதிகளில் பிரமாண்ட
பள்ளங்கள் தோன்றுகின்றன என்று விஞ்ஞானிகள் சிலர் தெரிவித்தனர். ஆனால்,
விஞ்ஞானிகள் சிலர் இந்தக் கருதுகோளை மறுத்து வருகின்றனர்.
ஸ்கோல்கோவோ
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஹைட்ரோகார்பன் துறை
ஆராய்ச்சியாளர் எவ்கெனி சுவிலின் (Evgeny Chuvilin) “இதுவரை, இந்தப்
பள்ளங்கள் ஏன் தோன்றுகின்றன என்பதைக் கூறும் ஒரு கருதுகோள் கூட
ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. திடீர் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்து
வருகிறோம்” என்று கூறியுள்ளார்.