பிரசவத்தின் போது துண்டான குழந்தையின் தலை... பாகிஸ்தானில் நடந்த கொடூரம்
By: Nagaraj Wed, 22 June 2022 08:36:55 AM
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடந்த கொடூரம்... பாகிஸ்தானில் பிரசவத்தின்போது துண்டான சிசுவின் தலையை, தாயின் வயிற்றுக்கு உள்ளேயே வைத்து தைக்கப்பட்ட கொடூர சம்பவம் நடந்தேறியுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கர்ப்பிணிப் பெண்ணொருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து குறித்த 32 வயது பெண் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு மகப்பேறு மருத்துவர் இல்லாததால், ஊழியர்கள் சிலர் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்துள்ளனர்.
இதன்போது அவர்களின் அலட்சியத்தினால் குழந்தையின் தலை துண்டானது. பின்னர் சுகாதார ஊழியர்கள் தலையை தாயின் வயிற்றிலேயே வைத்து தைத்துள்ளனர். இதனால் அந்த பெண் ஆபத்தான நிலைக்கு சென்றுள்ளார்.
அதன் பின்னர் உடனடியாக மிதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட
அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, குழந்தையின் உடல் வெளியே
எடுக்கப்பட்டது.
எனினும் தலை உள்ளே சிக்கிக்கொண்டதால், தாயின்
கருப்பை உடைந்து விட்டதாக கூறப்பட்டது. தொடர்ந்து மீண்டும் அறுவை சிகிச்சை
செய்து குழந்தையின் தலை வெளியே எடுக்கப்பட்ட நிலையில் தற்போது அப்பெண்
நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அதிர்வலைகளை
ஏற்படுத்தியத்தைத் தொடர்ந்து, சிந்து மாகாணத்தின் சுகாதாரத் துறை
இயக்குனர் ஜூமான் பஹோடோ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.