டில்லியை புரட்டி போடும் கனமழை... தலைமை செயலகத்திலும் தண்ணீர் புகுந்தது
By: Nagaraj Fri, 14 July 2023 7:07:14 PM
டெல்லி: மழையால் மக்கள் பாதிப்பு... டெல்லி, இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து கொண்டு வருகிறது. அதனால் மக்களின் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இமாச்சலப்பிரதேசத்தில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் அது ஹரியானா மாநிலம் ஹத்னிகுண்ட் தடுப்பணையை அடைந்தது. அதன் காரணமாக டெல்லி குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மேலும் டெல்லி தலைமை செயலகத்திலும் தண்ணீர் புகுந்தது. அது மட்டுமில்லாமல் முதலவர், அமைச்சர்கள், உயர் அதிகாரிகளின் அலுவலகங்களிலும் வெள்ள நீர் புகுந்தது.
மேலும் போட் கிளப், பாண்டவ் நகர், காந்திநகர், பஜன்புரா ஆகிய பகுதிகள் வெள்ள நீரால் முற்றிலும் சூழப்பட்டுள்ளது. வீடுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட கார்கள் தண்ணீரில் மிதக்கின்றனர். அதே போன்று டெல்லி புளூலைன் பகுதியில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்தின் அணுகுசாலைகளில் தண்ணீர் தேங்கி இருக்கிறது.
வசிராபாத், சந்திரவால், ஓக்லா ஆகிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அதனால் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் சிங்கு எல்லை, படார்பூர் எல்லை, லோனி எல்லை, சில்லா எல்லை ஆகியவை வழியாக டெல்லிக்குள் கனரக வாகனங்கள் நுழைவதற்கு அரசு தடை விதித்து உள்ளது.
உணவு, பெட்ரோலிய பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு மட்டும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சூழ்நிலை மோசமாக இருப்பதால் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஞாயிறு வரை மூடப்படும் எனவும், அத்தியாவசிய பணிகளுடன் தொடர்பில்லாத அரசு அலுவலகங்களும் ஞாயிறுவரை மூடப்படும் என்றும் தனியார் அலுவலகங்கள், தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்றுமாறு அரசு அறிவுறுத்தியிருக்கிறது.