ஹோப் விண்கலம் இன்னும் 4 நாட்களில் செவ்வாய் கிரகத்திற்கு செல்லும்
By: Karunakaran Sat, 11 July 2020 9:13:11 PM
செவ்வாய் கிரகம் நோக்கி பயணம் செய்ய ஹோப் விண்கலத்தை அமீரகம் உருவாக்கியுள்ளது. இந்த விண்கலத்தின் இறுதி கட்ட பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப சோதனைகள் தற்போது நிறைவடைந்துள்ளது. பூமியில் இருந்து 49 கோடியே 35 லட்சம் கிலோ மீட்டர் தொலைவு உள்ள செவ்வாய் கிரகம் நோக்கி பயணம் செய்ய உள்ளது.
இதில் பொருத்தப்பட்டுள்ள கேமராவுடன் கூடிய 3 சிறப்பு உணரும் பகுதிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதன் மூலம் செவ்வாய் கிரகத்தின் மேலடுக்கில் உள்ள காலநிலை, பனி மேகங்கள், வானில் உள்ள காற்று மண்டலத்தில் கலந்துள்ள ஆக்சிஜன், ஹைட்ரஜன் மூலக்கூறுகளின் அளவு போன்றவை ஆய்வு செய்யப்படவுள்ளது.
ஜப்பான் நாட்டின் டனகஷிமாவில் எச் 2ஏ என்ற ராக்கெட் மூலம் இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டவுள்ளது. வருகிற 15-ந் தேதி அமீரக நேரப்படி நள்ளிரவு 12.51 மணிக்கு இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்காக அதில் 800 கிலோ ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளது. இன்னும் 4 நாட்களில் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
தற்போது ஜப்பானில் உள்ள மிட்ஷுபிஸ்சி கனரக தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட எச் 2 ஏ என்ற ராக்கெட்டில் இந்த விண்கலம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. வெப்பம் மற்றும் அதிக அழுத்தத்தை தாங்கும் சக்தியுடைய உலோக பொருட்களால் செய்யப்பட்டுள்ளதால், ஹோப் விண்கலம் எந்த வித கோளாறும் இல்லாமல் விண்ணில் செலுத்தப்படும். இந்த விண்கலம் 7 முதல் 9 மாதங்களில் அதாவது வருகிற 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையை அடையவுள்ளதாக அமீரக விண்வெளி ஏஜென்சி தெரிவித்துள்ளது.