ஆளுநர் மாளிகை கண்காணிக்கப்படுகிறது; மேற்கு வங்க ஆளுநரே கூறிய அதிர்ச்சி தகவல்
By: Nagaraj Mon, 17 Aug 2020 09:41:34 AM
ஆளுநர் மாளிகை கண்காணிக்கப்படுகிறது என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதை ஆளுநரே தெரிவித்துள்ளதால் அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். இவர் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வருகிறார்.
மம்தாவுக்கும் அம்மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கருக்கும் இடையிலும் பனிப்போர் நிலவி வருகிறது. பல்வேறு விவகாரங்களில் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கடந்த ஓராண்டாக மோதல் போக்கு நிலவுகிறது.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 2-வது நினைவு தினத்தை முன்னிட்டு
ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜக்தீப் தன்கர்
பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'ஆளுநர் மாளிகை
கண்காணிக்கப்படுவதாக வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். என் அனுமதியின்றி
வெளியில் செல்லக்கூடாத சில தகவல்கள், மின்னணு மூலம் இங்கிருந்து
பரிமாறப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இந்த நடவடிக்கை ஆளுநர் மாளிகையின் மாண்பைக் குலைக்கும் செயல் ஆகும். அதன்
மாண்பைக் பாதுகாக்க நான் எதையும் செய்யத் தயாராக உள்ளேன்' என்றார்.
இத்தகவல் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.