அடுத்த ஐந்து நாட்களுக்கும் கனமழைக்கு வாய்ப்புள்ளது .. இந்திய வானிலை ஆய்வு மையம்
By: vaithegi Fri, 05 May 2023 1:35:43 PM
சென்னை: தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளின் கிழக்கு திசை மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பதன் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 வாரமாகவே மழை பெய்து கொண்டு வருகிறது.
இதனை அடுத்து புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும், கடந்த 10 நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருவதனால் வெப்பத்தின் தாக்கம் மிகவும் குறைந்துள்ளதாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.