சென்னை மாநகரம் முழுவதும் நவீன கேமராக்கள் நிறுவும் பணி மும்முரம்
By: Nagaraj Sun, 25 June 2023 10:57:53 PM
சென்னை: சென்னை மாநகரம் முழுவதும் காவல்துறையின் 3வது கண் எனப்படும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நவீன கேமராக்கள் தொடர்ந்து நிறுவப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சென்னை திருவல்லிக்கேணி மற்றும் எழும்பூர் காவல் நிலையத்தில் 43 இடங்களில் தன்னார்வலர்கள் பங்கேற்புடன் 129 புதிய நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. சென்னை எழும்பூர் போலீஸ் மெஸ் அருகே நேற்று நடந்த விழாவில், இந்த கேமராக்களின் இயக்கத்தை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார்.
இந்த கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்படும் வீடியோக்கள் உயர் தரத்தில் உள்ளன. கேமராக்கள் இயங்கவில்லை என்றாலோ, சேதப்படுத்தப்பட்டாலோ தானியங்கி மூலம் ‘இ-மெயில்’ முகவரிக்கு எச்சரிக்கை செய்யும் வசதி உள்ளது. கண்காணிப்பு காட்சிகளை பதிவேற்றம் செய்யும் வகையில் இந்த கேமராக்களில் ‘வை-பை’ வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காணிப்பு கேமராக்களின் இயக்க விழாவில், கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா, இணை கமிஷனர்கள் திஷா மிட்டல், சிபி சக்கரவர்த்தி, துணை கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உள்பட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.