இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கருப்பு, சிவப்பு மண்பாத்திரம் கண்டுபிடிப்பு
By: Nagaraj Thu, 25 June 2020 9:49:13 PM
கருப்பு, சிவப்பு மண் பாத்திரம்... சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே 2,000-ம் ஆண்டுகளுக்கு முந்தைய கருப்பு, சிவப்பு மண் பாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டன.
திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய நான்கு இடங்களில் 6-ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இதில் முதுமக்கள் தாழிகள், மனித எலும்பு கூடு, விலங்கின எலும்புகள், மண்பானைகள், உலை போன்றவை கிடைத்து வருகின்றன.
இந்நிலையில் காளையார்கோவில் அருகே நல்லேந்தல் பகுதியில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் உடைந்த நிலையில் காணப்படுகிறது.
அந்த முதுமக்கள் தாழிக்குள் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய கருப்பு - சிவப்பு
மண் பாத்திரம் கிடைத்துள்ளது. கீழ் பகுதியும், மேல் மூடியும் உள்ளது.
இதுகுறித்து
தொல்லியல் ஆர்வலர் இலந்தக்கரை ஜெமினி ரமேஷ் கூறியதாவது: வைகை ஆற்றின் கிளை
ஆறுகள் காளையார்கோவில் பகுதியில் ஓடியதற்கான சான்றுகள் உள்ளன. மேலும்
காளையார்கோவில் அருகே இலந்தக்கரை, நல்லேந்தல் உள்ளிட்ட பல இடங்களில்
தொல்லியல் எச்சங்கள் காணப்படுகின்றன.
இந்நிலையில் நல்லேந்தல்
பகுதியில் சிதறி கிடந்த முதுமக்கள் தாழிக்குள் கருப்பு, சிவப்பு மண்
பாத்திரம் ஒன்று கிடைத்துள்ளது. இது 2,000-ம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக
இருக்கக் கூடும். அகழாய்வு நடத்தினால் மேலும் பல தொல்பொருட்கள் கிடைக்கும்.
இதனால் காளையார்கோவில் பகுதியில் அகழாய்வு நடத்த அரசு முன்வர வேண்டும்,
என்று கூறினார்.