லேண்டரின் இறுதிகட்ட வேகக்குறைப்பு நடவடிக்கை வெற்றி
By: Nagaraj Sun, 20 Aug 2023 4:50:29 PM
புதுடில்லி: இஸ்ரோ அறிவிப்பு... சந்திரயான் - 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த லேண்டரின் இறுதிகட்ட வேகக் குறைப்பு நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, லேண்டரை நிலவின் மேற்பரப்பில் பத்திரமாக தரையிறக்குவதற்கான முன்னேற்பாடுகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். நிலவின் சுற்றுப்பாதையில் சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டரை பிரிக்கும் பணி கடந்த 17ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது.
அதன்பிறகு, படிப்படியாக அதன் வேகம் குறைக்கப்பட்டதை அடுத்து, நிலவின் மேற்பரப்பிற்கும் லேண்டருக்கும் இடையிலான தூரமும் குறைந்துள்ளது.
குறைந்தபட்சமாக நிலவிலிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்திலும், அதிகபட்சம் 134 கிலோ மீட்டர் தூரத்திலும் லேண்டர் பயணிப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
திட்டமிட்டபடி ஆய்வுகளை மேற்கொள்ள தரையிறங்கும் இடத்தில் சூரிய உதயம் தொடங்கும் நேரத்திற்காக லேண்டர் காத்திருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
வரும் 23ஆம் தேதியன்று மாலை 6.04 மணி அளவில் லேண்டர் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. ஏற்கனவே மாலை 5.45 மணியளவில் தரையிறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேரம் மாற்றப்பட்டுள்ளது.